நீதிபதி வீட்டில் பண மூட்டை; விசாரணை அறிக்கை தாக்கல்

புதுடில்லி : டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் மார்ச் 14ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஒரு அறையில், மூட்டை மூட்டையாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தாவாலியா, கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, தீயணைப்புத் துறைத் தலைவர் உட்பட 50க்கும் மேற்பட்டோரின் சாட்சியங்களை ஆய்வு செய்து, கடந்த, 3ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், தன் தரப்பு வாதத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யும்படியும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

விசாரணை அறிக்கையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவராகவே பதவியில் இருந்து விலகும்படி, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்படி, ராஜினாமா செய்யாவிட்டால், விசாரணை அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, வரும் 13ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதற்குள் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கவேண்டும்.

எனவே, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான விசாரணை அறிக்கை மற்றும் அவர் தரப்பு விளக்கக் கடிதத்தை இணைத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார்.

Advertisement