கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: 82 பேர் ஆஜர்

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டு, வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பான வழக்கு விசாரணையில், 82 பேர் ஆஜராகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு, ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டம், பெரும் கலவரமாக மாறியது. கலவர வழக்கை சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி., அம்மாதுரை மேற்பார்வையிலான போலீசார் விசாரித்தனர்.

அதில், பள்ளி வளாகத்திற்குள் இருந்த பொருட்களை சூறையாடி திருடியது, போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது, பசுமாடுகளை துன்புறுத்தியது, சின்னசேலத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் உட்பட போலீசாரை கல்வீசி தாக்கியது என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கலவரம் தொடர்பாக, 916 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில், பள்ளி வளாகத்திற்கு முன்பு கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பான வழக்கில் 121 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதில், ஒருவர் இறந்து விட்டார். இந்த வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதில், 2 பெண்கள் உட்பட 82 பேர் நேற்று ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ரீனா, வழக்கின் விசாரணையை வரும், ஜூன் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement