பிளஸ் 2 பொதுத் தேர்வு; மாவட்டத்தில் 94.90 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி மாநில அளவில் 20வது இடம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.90 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி தர வரிசைப் பட்டியலில் மாநில அளவில் திண்டுக்கல் மாவட்டம் 20வது இடத்தை பிடித்தது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச். 3ல் துவங்கி மார்ச். 25 வரை நடந்தது.

இத்தேர்வின் முடிவுகள் நேற்று காலை 9:00 மணிக்கு வெளியானது. மாணவர்கள் தேர்ச்சி முடிவுகளை பெற்றோரின் அலைபேசி மூலமாக தெரிந்து கொண்டனர். மேலும் பள்ளியில் மாணவர்கள் கொடுத்திருந்த அலைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது.

19,668 மாணவர்கள் தேர்ச்சி



திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளது. இங்குள்ள 216 பள்ளிகளில் இருந்து 9716 மாணவர்கள், 11,009 மாணவிகள் என மொத்தம் 20,725 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினார்கள்.

இதில் நேற்று வெளியான தேர்வு முடிவில் 9007 மாணவர்கள், 10,661 மாணவிகள் என மொத்தம் 19,668 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் 92.70 சதவீதம் மாணவர்கள், 96.84 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 94.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தின் தர வரிசைப்பட்டியலில் கடந்த 2024ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் 95.40 சதவீதம் பெற்று 19வது இடத்தை பிடித்தது.

நடப்பாண்டு மாநில அளவில் 20வது இடத்தை பிடித்தது.

Advertisement