மலைப்பகுதியில் தொடர் மின்தடை இருளில் மலைக் கிராமங்கள்

தாண்டிக்குடி: தாண்டிக்குடி, பண்ணைக்காடு பகுதியில் தொடர் மின்தடையால் மலை கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இம்மலைப் பகுதிகளுக்கு கொடைக்கானல் துணை மின் நிலையம் மூலம் மின்சப்ளை அளிக்கப்படுகிறது.

இரு தினங்களாக மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் மின்பாதைகளில் இடையூறு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் விடிய, விடிய இருளில் தவிக்கும் சூழல் ஏற்பட்டடது.

கொடைக்கானல் சப்ளையில் பிரச்னை ஏற்படும் நிலையில் மாற்றாக வத்தலக்குண்டு, செம்பட்டி சப்ளை இருப்பது வழக்கம். இதிலும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவிக்கின்றனர்.

தாண்டிக்குடி, பண்ணைக்காடு மின் அலுவலகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பபடாததால் இடையூறுகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாரல் மழைக்கே மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.

அடிக்கடி இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது இருக்க சில ஆண்டுகளுக்கு முன் ஊத்து பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

தற்போது நிலம் கையகப்படுத்தப்பட்டபோதும் பணிகள் கிடப்பில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மலைப்பகுதியில் நீடிக்கும் மின் தடையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement