பிளஸ் 2 பொதுத் தேர்வில் கம்பம் நாகமணியம்மாள் பள்ளி சாதனை

கம்பம்: கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாம் இடம் பெற்றும், நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சுபாசினி 600 க்கு 595 மதிப்பெண்கள் பெற்று தேனி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

இப்பள்ளி மாணவர் ஸ்ரீபதி 592 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடமும், 591 மதிப்பெண்கள் பெற்று மாணவி அட்சயா பள்ளி அளவில் மூன்றாம் இடம் பெற்றனர்.

இப் பள்ளியில் தேர்வு எழுதிய 165 மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று நூறு சதவீத தேர்ச்சி அடைந்தனர். இதில் 590 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேர், 580 க்கு மேல் 7 பேர், 550 க்கு மேல் 39 பேர், 500 க்கு மேல் 79 பேர் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

கணிதம், வேதியியல் பாடங்களில் தலா 2 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் 10 பேர், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் 3 பேர், வணிகவியல் 4 பேர், அக்கவுண்டன்சி 8 பேர், வணிக கணிதத்தில் ஒருவர் என நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். சாதனை மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் காந்த வாசன், இணை செயலர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

தாளாளர் காந்த வாசன் கூறுகையில் , 'இணை செயலர் சுகன்யா தலைமையில் ஆசிரியர் குழு அமைத்து மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் மாநில அளவில் ரேங்கிங் பெற முயற்சிப்போம்,'என்றார்.

Advertisement