'எதிரிகளால் தாங்கிக்கொள்ள முடியாத 4 ஆண்டு சாதனை': திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

8

திருச்சி: ''தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனைகளை, அரசியல் எதிரிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,'' என்று திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருச்சி பஞ்சப்பூரில், 408.36 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், 128.94 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கனரக சரக்கு வாகனங்கள் முனையம் ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார்.

பின் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

திராவிட மாடல் ஆட்சியில், திருச்சி மாவட்டத்துக்கு கடந்த 4 ஆண்டுகளில், 26,066 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. பல முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, நான் கொடுத்த ஏழு முக்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளேன். சரிவில் இருந்த தமிழக பொருளாதார வளர்ச்சியை, நான்கே ஆண்டுகளில், 9.69 சதவீதமாக்கி, இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றி உள்ளோம்.

வேளாண் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறோம்.

தமிழகத்தில், தி.மு.க., அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை நினைத்துப் பார்க்கையில், எனக்கே, 'அடேங்கப்பா இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோமா?' என்ற வியப்பு ஏற்படுகிறது.

தி.மு.க., ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைத் தான், அரசியல் எதிரிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனிவரும் காலங்களில், தற்போதைய சாதனைகளை விஞ்சும் வகையில் நாம் செயல்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement