அரசு மகளிர் விடுதியில் சாப்பாடு நல்லாருக்கா?
தொண்டாமுத்தூர்: பூலுவபட்டியில் உள்ள அரசு மகளிர் விடுதியில், மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
பூலுவபட்டி, ராமநாதபுரத்தில், அரசு மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் படிக்கும், 60க்கும் மேற்பட்ட மாணவிகள், விடுதி காப்பாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இவ்விடுதியில், மாவட்ட கலெக்டர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
விடுதியில் தயார் செய்யப்படும் உணவு தரமாக உள்ளதா என்பதை, உணவை உண்டு கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, விடுதியில், அடிப்படை வசதிகள் எப்படி உள்ளது, பாதுகாப்பு வசதிகள் உள்ளதா, விளையாட்டு உபகரணங்கள் போதிய அளவில் உள்ளதா என்பது குறித்து, விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளிடம் கேட்டறிந்தார்.
வேறு ஏதேனும் வசதிகள் ஏற்படுத்த வேண்டுமா என்பது குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, விடுதி காப்பாளர்கள் உடனிருந்தனர்.