குமுளி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களால் விபத்து அபாயம்; கோடை விடுமுறை வரை கண்காணிப்பு அவசியம்

கூடலுார்,: குமுளி மலைப்பாதையில் ஆங்காங்கே நிறுத்தப்படும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க கோடை விடுமுறை முடியும் வரை தினந்தோறும் வனத்துறையினர் ரோந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது குமுளி மலைப்பாதை. லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். இதில் மாதா கோயில் வளைவு, கொண்டை ஊசி வளைவு, இரைச்சல் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படும்.
பள்ளி விடுமுறை
தற்போது பள்ளி விடுமுறையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். இங்குள்ள தேக்கடி, சுருளி அருவி, பென்னிகுவிக் மணிமண்டபம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகனங்கள் அதிகமாக உள்ளன. இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் மலைப்பாதையில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காக வாகனங்களை ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்து ஏற்படும் வகையில் நிறுத்துகின்றனர். இதனால் விபத்துக்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இரைச்சல் பாலம்
தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யாததால் ராட்சத பைப் வழியாக தண்ணீர் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டு, போர்பை அணையிலிருந்து இரைச்சல் பாலம் வழியாக தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டுள்ளது. இரைச்சல் பாலத்தில் வெளியேறும் தண்ணீரின் அழகை கண்டு ரசிப்பதற்காக அப்பகுதியில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகிறது. ஆபத்து நிறைந்த வளைவு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதால் மலைப்பாதையில் ஏற முடியாமல் திணறி வரும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. அதனால் மலைப் பாதையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும். மேலும் பள்ளி விடுமுறை நாட்கள் முடியும் வரை வனத்துறையினருடன் போலீசார் இணைந்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
விழிப்புணர்வு
தன்னார்வலர்கள் கூறும்போது, 'விபத்து ஏற்படாமல் தவிர்க்க மலைப்பாதை துவங்கும் லோயர்கேம்பிலும் எல்லைப் பகுதியான குமுளியிலும் வாகனங்களை நிறுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்', என்றனர்.
மேலும்
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது