குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தை இயக்கிய பெண் துாய்மை பணியாளர்கள்

சிவகாசி : சிவகாசி அருகே ஆணையூர் ஊராட்சியில் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை ஆண்களுக்கு இணையாக பெண் துாய்மை பணியாளர்கள் இயக்கி குப்பைகளை சேகரிக்கின்றனர்.

சிவகாசி அருகே ஆணையூர் ஊராட்சியில் துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இங்கு ஆண் பெண் என 40 க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர். பொதுவாக இந்த வாகனங்களை ஆண் தூய்மை பணியாளர்களே இயக்கி குப்பைகளை சேகரிப்பர். ஆனால் இங்கு ஆண்களுக்கு இணையாக 15 வாகனங்களை பெண் துாய்மை பணியாளர்கள் இயக்கி குப்பை சேகரிக்கின்றனர். சரியான நேரத்திற்கு சென்று குப்பைகளை சேகரிக்கும் இவர்களை மக்கள் பாராட்டுகின்றனர்.

பெண் துாய்மை பணியாளர்கள் கூறுகையில், தள்ளுவண்டிகளில் தெருக்களில் சென்று குப்பைகளை சேகரிப்பது வழக்கம். பேட்டரி வாகனங்கள் இருப்பதால் அதனை இயக்குவதற்கு பழகியுள்ளோம். இந்த வாகனம் எளிதாக இருப்பதால் குறுகிய தெருக்களில் கூட சென்று குப்பைகளை சேகரிக்கின்றோம் என்றனர்.

Advertisement