வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சிக்கு தடை; பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை!

டாக்கா: வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு, அந்நாட்டு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இதையடுத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு பதியப்பட்டது.

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலை கட்டுப்படுத்த ஷேக் ஹசீனா அரசு தவறி விட்டது என இடைக்கால அரசு குற்றம் சாட்டி இருந்தது. இதற்கிடையே, இடைக்கால அரசுக்கு எதிராக, சமூக வலைதளம் வாயிலாக, வங்கதேச மக்கள் மற்றும் அவாமி லீக் கட்சி தொண்டர்களிடம் ஷேக் ஹசீனா பேசி வந்தார். இந்நிலையில், வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு, அந்நாட்டு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.



பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் காக்க, அவாமி லீக் கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement