பிரிமியர் தொடர் எப்போது: ஆமதாபாத்தில் பைனல்

புதுடில்லி: பிரிமியர் தொடரின் எஞ்சிய போட்டிகளை வரும் மே 16 அல்லது 17 முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில், பிரிமியர் லீக் கிரிக்கெட் 18வது சீசன் நடக்கிறது. சமீபத்தில் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப்-, டில்லி இடையிலான லீக் போட்டி, இந்தியா, பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இத்தொடரை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பதாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவித்தது.

தற்போது போர் முடிவுக்கு வந்திருப்பதால், மீண்டும் போட்டிகளை நடத்திட பி.சி.சி.ஐ., திட்டமிட்டு வருகிறது. நேற்று, பி.சி.சி.ஐ., அதிகாரிகள், பிரிமியர் தொடரின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இணைந்து ஆலோசனை நடத்தினர். இதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி, வரும் மே 16 அல்லது மே 17 முதல் மீண்டும் போட்டி துவங்கும். பைனல் மே 25க்கு பதில் ஜூன் 1ல் நடக்கும். இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தயாராக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நான்கு மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடத்தப்படும். டில்லி, தர்மசாலாவில் போட்டிகள் நடக்காது. திட்டமிட்டபடி தகுதிச் சுற்று-1, 'எலிமினேட்டர்' போட்டிகள் ஐதராபாத்தில் நடக்கும். கோல்கட்டாவில் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், தகுதிச் சுற்று-2, பைனல் ஆமதாபாத்தில் நடத்தப்படலாம். இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும்.


கடந்த மே 9ல் லக்னோவில் நடக்க இருந்த லக்னோ, பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியிலிருந்து தொடர் மீண்டும் துவங்கலாம். இதனால் பாதியில் கைவிடப்பட்ட பஞ்சாப், டில்லி அணிகளுக்கு இடையிலான போட்டியை மீண்டும் நடத்த வாய்ப்பு இல்லை. ஒருவேளை நடத்தாவிட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ''மீதமுள்ள பிரிமியர் போட்டிகளை நடத்துவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. பத்து அணிகளின் உரிமையாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement