பொய் பிரசாரம் செய்யும் பாகிஸ்தான்; அது உலகிற்கே தெரியும்; காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

2

ஸ்ரீநகர்: "பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. அது உலகிற்கே தெரியும்" என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.


காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதலில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று (மே 12) ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லா கூறியதாவது:

கடந்த நான்கு நாட்களாக, ஜம்மு-காஷ்மீரில் போர் போன்ற சூழல் நிலவியது. பாகிஸ்தான் நடத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதலில் பூஞ்ச் மாவட்டம் ​​மிகவும் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதலில் 13 விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின. இந்த கடினமான சூழ்நிலையிலும் சகோதரத்துவத்தைப் பேணியதற்காக பூஞ்ச் ​​மக்களுக்கு நன்றி தெரிவித்தேன்..


நான் இங்குள்ள மக்களை சந்தித்து பேசினேன். அப்பகுதி மக்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம். மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்கியதாக பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. ஆனால் மக்களுக்கும், எனக்கும் உண்மை தெரியும். பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உலகிற்கே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement