தர்மலிங்கேஸ்வரர் கோவில் கிரிவலம்

போத்தனூர், ; மதுக்கரையிலுள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
மதுக்கரை மரப்பாலம் அருகே வனத்தையொட்டி, தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பக்தர்கள், இங்கு கிரிவலம் செல்வர். குறிப்பாக, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில், சிறப்பு வழிபாடு நடக்கும்.
அதுபோல் இவ்வாண்டும், நேற்று பவுர்ணமி முன்னிட்டு காலை, 8:00 முதல் பக்தர்கள், 5.5 கி.மீ. சுற்றளவு பாதையில், கிரிவலம் செல்ல துவங்கினர்.
முன்னதாக, சிவன் --- பார்வதி தம்பதி சகிதமாக கிரிவலப்பாதையில் சென்று, மலையின் கீழ் பகுதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிவனுக்கு அதிகாலையில் பால், தயிர், நெய், இளநீர் அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. கிரிவல பாதையில் பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானம் வழங்கப்பட்டது. அன்னதானமும் நடந்தது.
பல ஆயிரம் பக்தர்கள் சிவனை வழிபட்டு கிரிவலம் சென்றனர். போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.