வழக்கை ரத்து செய்ய சோனு நிகம் மனு; உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
பெங்களூரு : பஹல்காம் சம்பவத்துடன் கன்னடர்களை இணைத்து பேசிய விவகாரத்தில், தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாடகர் சோனுநிகம் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.
பெங்களூரில் ஈஸ்ட் பாயின்ட் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் ஏப்., 25, 26ல் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரபல பின்னணி பாலிவுட் பாடகர் சோனு நிகம் பங்கேற்றார்.
முதல் நாளில் அவர் பாடியபோது, கூட்டத்தில் இருந்த சிலர், கன்னடத்தில் பாடும்படி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தனர். இதை சோனு நிகம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன், கன்னடர்களை ஒப்பிட்டுப் பேசினார்.
இவரின் பேச்சுக்கு மாநிலம் முழுதும் பல்வேறு கன்னட அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். கன்னட திரைப்பட துறையினரும் அவருக்கு தடை விதித்தனர்.
அதன்பின், தன் பேச்சுக்கு அவர் மன்னிப்பும் கேட்டார்.
இதற்கிடையில், மே 2ம் தேதி அவர் மீது ஆவலஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மே 3ம் தேதி வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி மே 5ம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று சோனு நிகம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு நீதிபதி சிவசங்கர் அமரன்னவர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.