ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்; ஐந்து நாள் பயணமாக வருகை

1

ஊட்டி : கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சியை துவக்கி வைக்க, ஐந்து நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஊட்டி வந்தார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடப்பாண்டு கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக, 127வது மலர் கண்காட்சி மே 15ல் துவங்கி, 25 வரை 11 நாட்கள் நடக்கிறது.

இந்த கண்காட்சி மற்றும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில், ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஊட்டி வந்தார்.

கோத்தகிரி குஞ்சப்பனையில் கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோர் முதல்வரை வரவேற்றனர். கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில், கட்சியினர் வரவேற்பு அளித்து புத்தகங்களை வழங்கினர்.

மதியம் 2:00 மணிக்கு ஊட்டி தமிழக விருந்தினர் மாளிகையை முதல்வர் வந்தடைந்தார்.

இன்று மாலை, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு முதல்வர் செல்கிறார்.

அங்குள்ள யானைகள் முகாமில் பணியாற்றி வரும் யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 44 வீடுகளை திறந்து வைத்து, வளர்ப்பு யானைகளை பார்வையிடுகிறார்.

'எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப் படத்தில் நடித்து, 'ஆஸ்கார்' விருது பெற்ற யானைகள் மற்றும் பாகன் தம்பதி பெள்ளி பொம்மன் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

முன்னெச்சரிக்கையாக, முதுமலையில் முதல்வர் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

முதுமலை வனத்துறையினர் கூறுகையில், 'முதல்வர் வருகையையொட்டி இன்று மாலை, தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணியருக்கு அனுமதி இல்லை' என்றனர்.

Advertisement