வீட்டில் புகுந்த ராட்சத முதலை சிதம்பரம் அருகே மக்கள் பீதி

காட்டுமன்னார்கோவில் : குமராட்சியில் வீட்டிற்குள் புகுந்த முதலையை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலப்பன். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தார்.

அப்போது, வீட்டு வராண்டாவில், 100 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று, ஊர்ந்து வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்த முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்வாணன், இளைஞர்கள் கமலக்கண்ணன், ராஜமலைசிம்மன், வினோத், குமார், ராமஜெயம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக கட்டினர்.

தொடர்ந்து, சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தையடுத்து, நேற்று வனவர் பன்னீர்செல்வம், வன காப்பாளர் ஞானசேகரன், ஸ்டாலின் ஆகியோர் முதலையை மீட்டு சிதம்பரம் அடுத்த வக்காரமாரி ஏரியில் விட்டனர்.

Advertisement