குடும்ப தகராறை தடுக்க முயன்றவர் மீது தாக்குதல்

கோயம்பேடு விருகம்பாக்கம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார், 25; பேக்கரி ஊழியர். இவரது மனைவி ஸ்வேதா, 22. இவரது தோழி சாருமதி. சாருமதிக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், கணவர் தமிழ்செல்வம், 28, உடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருடன் வாழ பிடிக்கவில்லை என, தோழி ஸ்வேதாவின் வீட்டிற்கு கடந்த 9ம் தேதி வந்து புலம்பியுள்ளார். ஸ்வேதாவின் தோழி, சாருமதி மற்றும் அவரது குழந்தையை அழைத்துக் கொண்டு, கணவர் அருண்குமாரின் சொந்த ஊரான ஆந்திரா மாநிலத்திற்கு சென்றார். இரண்டு நாட்கள் அங்கு தங்கினர்.

இந்த நிலையில், அருண்குமாரிடம் சாருமதியின் கணவர் தமிழ்செல்வம் 'இனி தகராறில் ஈடுபட மாட்டேன்' என மொபைல் போனில் பேசினார். அருண்குமார் ஆந்திரா சென்று, சாருமதியை அழைத்து கோயம்பேடில் வந்து தமிழ்செல்வத்திடம் ஒப்படைத்தார்.

அங்கு நண்பர்களுடன் காத்திருந்த தமிழ்செல்வம், மனைவி பிரிந்து செல்ல அருண்குமார் மற்றும் அவரது மனைவி தான் காரணம் என, நைசாக அழைத்து சென்று நண்பர்களுடன் சேர்ந்து அருண்குமாரை தாக்கி, கத்தியால் கழுத்தில் வெட்டினார். அங்கிருந்தோர் அருண்குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து விசாரித்த போலீசார், விருகம்பாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்த தமிழ்செல்வம், 29, மற்றும் துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகுமார், 32, ஆகியோரை கைது செய்தனர்.







Advertisement