குப்பை எரிப்பதால் மூச்சுத் திணறல்

மதுரை : நாகமலை புதுக்கோட்டை சாலை பகுதியில் சட்ட விரோதமாக குப்பை எரிப்பதால் வாகன ஓட்டிகள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.

மதுரை- தேனி ரோட்டில் உள்ள நாகமலை புதுக்கோட்டையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே குப்பை கொட்டியிருந்த இடத்தில் யாரோ தீவைத்துள்ளனர். இதனால் அப்பகுதி கம்பத்தில் இருந்த பைபர் ஆப்டிக் கேபிள்களும் எரிந்தன. வாகன ஓட்டிகள் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். சில வாகனங்கள் பொறுக்க முடியாமல் வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்தினர். அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இது போன்று சட்ட விரோதமாக நெடுஞ்சாலை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது முதல் முறையல்ல. அடிக்கடி இன்டர்நெட் சேவை கேபிள்களோடு குப்பையை எரிப்பதால் இணையதளம் தடை பெற்று விடுகிறது. அதனால் மாற்று இணையங்களுக்கு கட்டணம் செலுத்த நேரிடுகிறது. அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement