மதுரை சித்திரைத் திருவிழாவில் 2 பேர் இறந்த விவகாரம்: போலீஸ் கூறுவது என்ன?

5


மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவில் நேற்றுமுன்தினம் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் சமயத்தில் இருவர் இறந்த விவகாரத்தில் 'கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை' என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.


அவர்கள் தெரிவித்துள்ளதாவது: வி.ஐ.பி., பாஸ் உடன் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து முத்தையா நகர் பூமிநாதன் 64, மனைவி இந்திரா, இரு உறவினர்களுடன் அதிகாலை 4:05 மணிக்கு வி.ஐ.பி., பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது பூமிநாதனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். உடனடியாக 4:10 மணிக்கு, தயார் நிலையில் இருந்த '108' ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஜவுளிக்கடையில் கடையில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் மருத்துவக்குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டது.


பின்னர் ஆம்புலன்ஸ் செல்வதற்கான பிரத்யேக பாதையில் அழைத்துச்செல்லப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் வரும் வழியில் பூமிநாதன் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர். இவர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை.


அன்று காலை யானைக்கல் புதுப்பாலம் 4வது துாண் கீழ் ஒருவர் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் செல்லுார் அகிம்சாபுரம் மாரிக்கண்ணன் 42, எனத்தெரிந்தது. இவர் 3 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து கிடைக்கும் இடங்களில் உணவு உண்டும், நினைத்த இடத்தில் உறங்கியும் வந்துள்ளார். இவரும் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை. இவரது இறப்பிற்கும், சித்திரைத்திருவிழாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement