அதிகாரிகள் பாராமுகம்: ராமநாதபுரம் பெரிய கண்மாய் மதகுகள் சேதம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் --மதுரை ரோடு லாந்தையில் உள்ள பெரிய கண்மாய் தென்கலுங்கு மதகின் ஷட்டர் பகுதியில் கட்டடம் சேதமடைந்துள்ளதுடன் கால்வாய்கள் பராமரிப்பின்றி சீமைக்கருவேலம், புதர் வளர்ந்துள்ளது. இது தெரிந்தும் ஏனோ அதிகாரிகள் கண்டும் காணாததுபோல உள்ளதால் கோடை காலத்தில் கண்மாயை துார்வாரி ஷட்டரை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.



ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில் துவங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம், 8.24 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க முடியும். இந்த கண்மாய் பாசன நீரில் 3500 ஏக்கர் நன்செய், புன்செய் சாகுபடி நடக்கிறது.

தொருவளூர், பாப்பாகுடி, குமரியேந்தல், கவரங்குளம், களத்தாவூர், சூரன்கோட்டை, இடையர்வலசை, கே.கே.நகர், முதுனாள், நொச்சிவயல், சூடியூர், அச்சுந்தன்வயல், புத்தேந்தல், சாக்காங்குடி, வன்னிவயல், சித்துார், லாந்தை, ராமநாதபுரம் பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். மேலும் இந்த கண்மாய் நீர் ராமநாதபுரம் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாகும்.

களத்தாவூர், நொச்சிவயல், கூரியூர், புத்தேந்தல் செக்டேம்களில் இந்த கண்மாய் நீர் தேக்கப்படும். ராமநாதபுரம் நகரில் உள்ள முகவை ஊருணி, லெட்சுமிபுரம் ஊருணி, நீலகண்டி ஊருணி, பேராவூர் கண்மாய், நொச்சியூருணி, கிடாவெட்டி ஊருணி, குண்டூரணி, செட்டியூருணி, அல்லிக்கண்மாய் ஊருணி உள்ளிட்டவைகளுக்கு பெரிய கண்மாய் நீர்தான் ஆதாரமாக உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கண்மாய் துார்ந்து போய் மண் மேடாகிவிட்டது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதி குறைந்து நாட்டு கருவேல மரங்கள் காய்ந்துள்ளன. கண்மாய் துார்வாரப்படாமலும், வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் மழை நீர் வீணாகிறது.

ராமநாதபுரம்--மதுரை ரோடு லாந்தை அருகே தென்கலுங்கு பகுதியில் ஷட்டர் திறப்பு பகுதியில் கட்டடம் சேதமடைந்து விரிசல் காணப்படுகிறது. மேலும் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டியுள்ளது.

இதனால் மழை பெய்தாலும் முழுமையாக நீரை சேமிக்க முடியவில்லை. தென்கலுங்கு பகுதியை சுத்தம் செய்து, கண்மாயை துார்வாரி, ஷட்டர் பழுது, கட்டடத்தை சீரமைக்க பொதுப்பணித்துறை (நீர்வளம்) நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Advertisement