மே மாதத்திற்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த  பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் 

ராமநாதபுரம்: -பள்ளிக்கல்வித்துறை மே மாதத்திற்குள் பணியிட மாறுதலுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுகளை நடத்த வேண்டும் என தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் நிறுவனர் தலைவர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.அவர் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்கூறியிருப்பதாவது:

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டு தோறும் மே மாதம் நடத்தப்படும்.

இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு இன்று வரை வெளியிடப்படவில்லை. எப்போது வெளியிடப்படும் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

பொது மாறுதல் கேட்கும் ஆசிரியர்களின் விபரம் எமிஸ் வாயிலாக பெறப்படும். இதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும்.

ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் தயாரித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடும்.

இந்த முன்னுரிமை பட்டியலில் யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்கான முறையீடு செய்ய குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும்.

அதன் பின் இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள்ளும், கல்வி மாவட்டங்களுக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் என கலந்தாய்வு மே மாதம் முழுவதும் நடைபெறும்.

அடுத்த கல்வியாண்டு பள்ளி திறப்பதற்கு முன்பு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும். ஆசிரியர்கள் தங்களுக்கான பள்ளிகளில் பணியில் சேர ஏதுவாக இருக்கும்.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்க 18 நாட்களே உள்ளன. ஆனால் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக எந்த அறவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை.

கோடை விடுமுறைக்கு முன்பு பணியிட மாறுதல் பெற்றால் தான் ஆசிரியர்கள் பணியில் சேர வசதியாக இருக்கும். மாணவர்கள் கற்றல் மற்றும் கற்பித்தலிலும் எந்த இடையூறும் ஏற்படாது.

அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை ஆசிரியர்கள் கற்பிக்க தொடங்கி விடுவார்கள். பாடங்கள் தொடங்கிய பின் மாணவர்கள் ஆசிரியர்களோடு நெருங்கி பழகி விடுவார்கள்.

அவ்வாறு பழகிய பின் வேறு பள்ளிக்கு ஆசிரியர்களை மாற்றினால் மாணவர்கள் மனநிலையும், கற்பித்தல் திறனும் பாதிக்கப்படும்.

ஆசிரியர் பணியிட மாறுதல் முடிந்தால் தான் முந்தைய கல்வியாண்டில் காலி பணியிடங்கள், உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை எவ்வளவு என பட்டியல் தயாரித்து வெளியிட்டால் தான் சிறப்பாக இருக்கும்.

காலிப்பணியிடங்களில் பணி நிரவல் மூலம் உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இது தான் நடைமுறையில் உள்ளது.

ஆண்டு தோறும் இந்த நடைமுறை மாற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை இதனை கவனத்தில் கொண்டு மே மாதத்தில் ஆசிரியர்களுக்கானபணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement