நிலவின் மீது லேசர் கதிரை பாய்ச்சிய சீனா

மிகத் துல்லியமாக, பூமியிலிருந்து நிலவின் மேற்பரப்பிற்கு லேசர் கதிரை செலுத்துவதில் வெற்றி கண்டுள்ளனர் சீன விஞ்ஞானிகள். ஷாங்காய் வானியல் ஆய்வகம் அறிவித்துள்ள இந்த சாதனை, சந்திரனை ஆராய்வதில் குறிப்பிடத்தக்க மைல்கல்தான். இந்த சோதனையில், உயர் ஆற்றல் கொண்ட, பச்சை நிற லேசர் 3,84,400 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவிலுள்ள நிலாவின் பரப்பு மீது செலுத்தப்பட்டது. அந்த லேசர் முந்தைய நிலவுப் பயணங்களில் நிறுவப்பட்ட ஒரு பிரதிபலிப்பான் மீது பட்டு பூமிக்குத் திரும்பியது.

லேசர் மூலம் துாரத்தை அளவிடும் சோதனைகள் புதியவை அல்ல. அமெரிக்காவின் அப்போலோ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் 1970களில் பிரதிபலிப்பான்களை நிறுவினர். இருப்பினும், சீனா, உள்நாட்டிலேயே லேசர் அமைப்பை உருவாக்கி, சுயசார்பை நிலைநாட்டியுள்ளது. இத்தகைய தொழில்நுட்பம், நிலவின் துாரம், ஈர்ப்பு மாற்றங்கள் மற்றும் நில அதிர்வு செயல்பாடுகளை, கண்காணிக்கும் விதத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

எதிர்காலத்தில், லேசர் தொழில்நுட்பம், நிலவில் வான் போக்குவரத்துக்கு வழிகாட்ட உதவும். அல்லது நிலவில் அமைக்கப்படும் முகாம்களுக்கு, பூமியிலிருந்து மின்சாரத்தை அனுப்பவும் உதவும்.

சீனாவின் இந்த ஆராய்ச்சி, வெறும் விளம்பர முயற்சி என்று சொல்லிவிட முடியாது. சீனா, விண்வெளி உள்கட்டமைப்பு, துல்லியமான பொறியியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில், மற்ற நாடுகளுடன் போட்டி போடுமளவுக்கு வளர்வதையே இது உணர்த்துகிறது. உலக நாடுகள் பல நிலவு ஆராய்ச்சியில் தீவிரம் காட்டும் நிலையில், சீனா விண்வெளிக்கு லேசர் அனுப்புவது வெறும் அறிவியல் குறும்புத்தனம் அல்ல. நிலவில் பெரிய அளவில் களமிறங்க சீனா திட்டமிடுவதையே இது காட்டுகிறது.

Advertisement