'அம்ரூத்' குடிநீர் திட்டப் பணிகளை 3 மாதங்களில் முடிக்க கலெக்டர் உத்தரவு

கம்பம்: 'அம்ரூத்' குடிநீர் திட்டப் பணிகள் 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தகாரர்களுக்கு கலெக்டர் ரஞ்ஜித் சிங் உத்தரவிட்டார்.

உத்தமபாளையும், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, ஓடைப்பட்டி பேரூராட்சிகளில் 'அம்ரூத்' குடிநீர் திட்ட பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளாகியும், திட்டப்பணிகள் நிறைவு பெறவில்லை. இந்த நான்கு பேரூராட்சிகளிலும் பாதி கிணறு தாண்டிய நிலையில் பணிகள் உள்ளது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

இந்த கூட்டத்தில் கலெக்டர், பேரூராட்சிகளின் தலைவர்கள், செயல் அலுவலர்கள், சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர்கள் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., வின் வேண்டுகோளை ஏற்று கலெக்டர், ஒப்பந்தகாரர்கள் உடனடியாக பணிகளை முடிக்க கூறினார். அதற்கு ஒப்பந்தகாரர்கள் 7 மாத அவகாசம் கேட்டனர். இதற்கு மறுத்த கலெக்டர், '3 மாதங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் பணிகளை முடித்து குடிநீர் சப்ளையை துவக்க உத்தரவிட்டார்.

Advertisement