பெங்களூரில் வெளுத்து வாங்கிய திடீர் கனமழை

பெங்களூரு: பெங்களூரில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

கொங்கன் கடலோர, வடக்கு உள் கர்நாடகா பகுதியில், காற்றின் சூழற்சி கடல் மட்டத்தில் இருந்து 1.5 கி.மீ., உயரத்தில் இருப்பதால், கர்நாடகாவின் வடக்கு, தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

அதன்படி நேற்று காலை வடமாவட்டமான ராய்ச்சூர், கலபுரகி, சித்ரதுர்கா, கதக், ஹாவேரி, பெலகாவி, விஜயபுரா பகுதிகளில், நேற்று காலையில் இருந்தே மழை பெய்தது.

தென் மாவட்டங்களான பெங்களூரு, மைசூரு, துமகூரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலையில் மழை இல்லை. ஆனால் நேற்று மாலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. பெங்களூரில் இரவு 8:30 மணிக்கு மேல், திடீரென கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் விடாமல் வெளுத்து வாங்கியது.

சிவாஜிநகர், விதான் சவுதா, ராஜ்பவன், கே.ஆர்.சதுக்கம், ராஜாஜிநகர், எலஹங்கா, ஹெச்.ஆர்.பி.ஆர்., லே- அவுட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

மெஜஸ்டிக் ரயில்வே சுரங்க பாதை கீழ் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஒரு சில இடங்களில் பி.எம்.டி.சி., பஸ்கள் மழைக்கு பழுதாகி நின்றன. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணியர் சிரமப்பட்டனர்.

Advertisement