இணையவழி மோசடிகளை தவிர்க்க தேனி போலீசார் புதிய முயற்சி

தேனி: இணையவழி குற்றங்களில் பொதுமக்கள் பணத்தை இழப்பதை தடுக்கும் வகையில் புதிய முயற்சியை தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

இதற்காக வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி வியக்க வைக்கும் வகையில் உள்ளது. பல்வேறு முன்னேற்றங்களுக்கு இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுகிறது. அதே நேரம் சில சமூக விரோதிகள் தொழில்நுட்பங்களை வைத்து பிறரிடம் பணம் பறிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

சில பங்கு வர்த்தகம், தங்க முதலீடு, பிரதமர் இலவச திட்டம் என பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இதனை நம்பி பணத்தை சிலர் இழக்கின்றனர். ஒரு சிலரிடம் வெளிமாநிலத்தில் இருந்து போலீசார் பேசுவது போல் பேசி 'டிஜிட்டல் அரஸ்ட்' செய்துள்ளதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர்.மாவட்டத்தில் இவ்வகையான இணைய மோசடிகளில் ஏமாறும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வகையான மோசடிகளில் பட்டதாரிகள் இரையாகுவது தான் சோகமானது. மோசடி செய்யும் நபர்கள் மஹாராஷ்டிரா, பீஹார், டில்லி உள்ளிட்ட மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து இச்செயல்களில் ஈடுபடுவதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

புதிய முயற்சி....

சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ''விசாரணைக்காக ஆந்திரா, விசாகபட்டிணம் சென்றிருந்தோம். அங்கு போலீசார், வங்கிகள் இணைந்து ஒரு திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இந்த திட்டத்தின்படி அதிக பணம் பரிவர்த்தனை செய்வோர் நேரடியாக வங்கிக்கு சென்று யாருக்கு, எதற்காக செலுத்துகிறார், அந்த கணக்கு விபரங்கள் வங்கியினர் பெறுகின்றனர். இதனை போலீசாருக்கும் தெரிவிக்கின்றனர். போலீசார் பணம் எந்த கணக்கிற்கு செலுத்தப்படுகிறதோ அந்த கணக்கு தொடர்பான விபரங்களை ஆய்வு செய்கின்றனர். அந்த கணக்கில் சட்ட விரோத பரிவர்த்தனை இல்லை என்பதை உறுதிபடுத்திய பின் பரிவர்த்தனைக்கு அனுமதிக்கின்றனர். இந்த நடைமுறை சில நிமிடங்களில் முடிகிறது. இதன் மூலம் பெரும்பாலான இணைய குற்றவாளிகள் வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்துவது தடுக்கப்பட்டுள்ளதாக,'' தெரிவித்தனர்.

இத் திட்டத்தை தேனி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இதற்காக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மூலம் வங்கிகளின் மாவட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதே போன்ற நடைமுறை இங்கும் பின்பற்ற உள்ளோம். பொதுமக்கள் ஒத்துழைத்தால் பயனாகும். தேவையில்லாத அழைப்புகள், குறுஞ்செய்திகள் வந்தால் 1930 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.

Advertisement