திருமணம் முடிந்த 20 நிமிடத்தில் புது மாப்பிள்ளை திடீர் மரணம்

பாகல்கோட் : திருமணம் முடிந்த 20 நிமிடங்களிலேயே புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம், கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டம், ஜம்கண்டி தாலுகா கும்பரஹல்லா கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரீசைலா குர்னே. இவரது மகன் பிரவீன் குர்னே, 26. ஜம்கண்டியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்தார்.

பிரவீனுக்கும், பெலகாவி அதானியை சேர்ந்த உறவினர் மகளுக்கும், ஜம்கண்டி டவுனில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை 8:00 மணிக்கு திருமணம் நடந்தது.

மணமகள் கழுத்தில், பிரவீன் தாலி கட்டினார். திருமணம் முடிந்ததும் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது பிரவீனுக்கு திடீரென கால்கள் நடுங்கின. நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்தார்.

இதை பார்த்து திருமணத்திற்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரவீனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினார். இதை கேட்டு பிரவீன் மனைவி, குடும்பத்தினர் கதறி அழுதனர்.

திருமணம் 8:00 மணிக்கு முடிந்த நிலையில், 8:20 மணிக்கு புதுமாப்பிள்ளை பிரவீன் இறந்துவிட்டார். திருமணமான 20 நிமிடங்களிலேயே புது மாப்பிள்ளை இறந்தது, உறவினர்களை கலங்கச் செய்தது.

Advertisement