டில்லி ஆம் ஆத்மியில் இருந்து 13 கவுன்சிலர்கள் விலகல்; 'இந்திர பிரஸ்தா' என்ற புதிய கட்சி துவங்கினர்

1

புதுடில்லி : டில்லியில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டது. அக்கட்சியில் இருந்து நேற்று ராஜினாமா செய்த 13 மாநகராட்சி கவுன்சிலர்கள், 'இந்திரபிரஸ்தா விகாஸ்' என்ற புதிய கட்சியை துவங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

டில்லி சட்டசபை தேர்தலின்போதே, மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்தனர்.

இதனால், மாநகராட்சியில் ஆம் ஆத்மியின் பலம் குறைந்தது. இதைத் தொடர்ந்தே, கடந்த மாதம் நடந்த மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை. டில்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளில் தற்போது, பா.ஜ., - 117, ஆம் ஆத்மி - 100, காங்கிரஸ் - 8 கவுன்சிலர்கள் உள்ளனர்.

இந்நிலையில்தான், மாநகராட்சி ஆம் ஆத்மி தலைவராக இருந்த முகேஷ் கோயல் தலைமையில் அக்கட்சியின் 13 கவுன்சிலர்கள் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.

புதிய கட்சியை துவங்கவுள்ள மூத்த கவுன்சிலர் முகேஷ் கோயல், நிருபர்களிடம் கூறியதாவது:

டில்லி மாநகராட்சி தேர்தலுக்குப் பின், இரண்டரை ஆண்டுகளாக எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யவில்லை. உட்கட்சி பிரச்னையே ஆம் ஆத்மியில் பிரதானமாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வளர்ச்சிப் பணிகளுக்கு கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. எனவேதான், இந்திரபிரஸ்தா விகாஸ் என்ற புதிய கட்சியை துவங்க முடிவெடுத்துள்ளோம். இதில், ஆம் ஆத்மியில் இருந்து பலர் இணைய உள்ளனர்.

எங்களுடைய இந்தக் கட்சி மாநகராட்சியில் மட்டுமே கவனம் செலுத்தும். மாநில அளவிலான அரசியலில் ஈடுபடும் நோக்கம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

'கவுன்சிலர்களின் இந்த முடிவுக்குப் பின்னால் ஆளும் பா.ஜ.,வின் சதி இருக்கிறது. குதிரைபேர நடவடிக்கையாக கவுன்சிலர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது' என, ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டி உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் கட்சித்தாவல் தடைச்சட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement