கோடையிலும் குளுமை... பொதுநலத்தால் சாத்தியம்... பசுமை வளர்க்கும் இளைஞர் கூட்டம்

நகராட்சியில் அண்ணா நகரில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக இந்த பகுதியில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. இதனால் நகர் பகுதி முழுவதும் மரங்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

அண்ணா நகர், பெரியார் நகர் செல்லும் வழியில் இளைஞர்கள் ஒன்று கூடி மரக்கன்றுகள் வாங்கி நட்டு காலையும் மாலையும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். இதன் காரணமாக இந்த பகுதி தற்போது மரங்கள் வளர்ந்து பசுமைச் சோலையாக மாறி உள்ளது. மேலும் தற்போது காலியாக உள்ள இடங்களில் அரளிச்செடி, குரோட்டான்ஸ் செடியை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்த்து வருகின்றனர்.

மழைக்காலத்தில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டதால் தற்போது கடும் கோடை காலத்தில் இந்த பகுதி முழுவதும் மரத்தின் நிழலால் குளுமையான சூழல் நிலவுகிறது. இளைஞர்களின் மரம் வளர்ப்பிற்கு அப்பகுதியில் உள்ள தொழில் முனைவோர்களும் தொழிலதிபர்களும் தேவையான உதவிகள் செய்து வருகின்றனர்.

மரக்கன்றுகள் இலவசமாக வழங்கியும் நிதி உதவி அளித்தும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். தன்னார்வமிக்க இளைஞர்கள் அண்ணா நகர் மட்டும் இன்றி பெரியார் நகர் பகுதியில் நடராஜா தியேட்டர் ரோடு பகுதியிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்த்து வருகின்றனர்.

மேலும் வைப்பாற்று கரையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பனைமர விதைகளையும் நட்டுள்ளனர். இந்தப் பனை மரங்கள் தற்போது கிளைகள் விட்டு வளர துவங்கி உள்ளது. ரோடு விரிவாக்கம், பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டம், மின்துறையினர் என அரசு துறை அலுவலர்கள் தொடர்ந்து மரக்கிளைகளை வெட்டி வந்தாலும் இப்பகுதி இளைஞர்களின் தொடர் முயற்சியால் மீண்டும் மீண்டும் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

உதவியால் சாத்தியமானது



கார்த்திக், தனியார் நிறுவன ஊழியர்: பசுமை இயக்கம், தடம் அமைப்பு என பல்வேறு அறக்கட்டளைகள் மரம் வளர்ப்பதற்கு உதவிகள் புரிந்தனர். தொழிலதிபர்கள் பலர் தன்னார்வமாக அளித்த நிதி உதவி மூலம் தரமான மரக்கன்றுகள் மற்றும் குரோட்டன்ஸ் செடிகள் வாங்கி சாலை ஓரத்தில் நட்டு பராமரித்து வருகிறோம். அக்னி நட்சத்திரம் வந்த போதும் இந்தக் கோடையிலும் அண்ணாநகர் பகுதியில் குளுமையான சூழல் நிலவுகிறது.

ஆர்வம் அதிகரிக்கும்



தீனா, தடம் அமைப்பு உறுப்பினர்: ஒவ்வொரு பகுதியிலும் இளைஞர்கள் ஒன்றாக இணைந்து மரம் வளர்ப்பில் ஈடுபட்டால் வருங்கால மாணவர்களுக்கும் மரம் வளர்ப்பில் ஆர்வம் ஏற்படும்.வைப்பாற்றில் 50 பனை மர விதைகளை தடம் அமைப்பின் மூலம் தயார் செய்து மாணவர்கள் மூலம் நடவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். மரியன் ஊரணியில் மலர் செடி, மரக்கன்று நடப்பட்டுள்ளது. தற்போது தடம் அமைப்பு மூலம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் காலியாக உள்ள இடங்களில் மரம் வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

Advertisement