என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர் பேட்டி

புதுச்சேரி: என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என, காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர் தெரிவித்தார்.

புதுச்சேரி காங்., அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில் காங்., கட்சியின் புதுச்சேரி மாநிலத்துக்கான மேலிடப் பொறுப்பாளர்கள் கிரிஷ்சோடங்கர், சுராஷ்ஹெக்டே, மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, பெத்தபெருமாள், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் கலந்து கொண்டனர்.

பின், காங்., மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர் கூறியதாவது:

புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அரசின் அனைத்துத் துறையிலும் முறைகேடு நடந்துள்ளது. அரசுத் துறை முறைகேடுகள் மீது நடவடிக்கை கோரி காங்., போராட்டம் நடத்தியது. ஆனால், நடவடிக்கை இல்லை. புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தனக்கட்டை கடத்தல் மற்றும் போலி மது ஆலை செயல்பட்டது குறித்து தமிழக போலீசார் விசாரித்து வழக்குப் பதிந்துள்ளனர். அமைச்சர் மீதான புகாருக்கு புதுச்சேரி அரசு மக்களிடம் உரிய பதிலை அளிக்க வேண்டும். அமைச்சர் மீதான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திரமோடி ஊழலில் ஈடுபடமாட்டோம். ஊழலை அனுமதிக்கமாட்டோம் என்கிறார். ஆனால், புதுச்சேரி அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து கவர்னர் உள்ளிட்டோர் மவுனம் காப்பது சரியல்ல. மக்கள் புதுச்சேரி அரசு மீது அதிருப்தியில் உள்ளனர் என்பதை கடந்த லோக்சபா தேர்தலில் காங்., கட்சியை வெற்றி பெறவைத்ததன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர், கூறினார்.

சட்டசபை தேர்தலுக்கு ரெடி

காங்., மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர் கூறுகையில், 'வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்., தயாராகிவிட்டது. கட்சியை முதலில் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அதன்பின் தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தற்போது இண்டியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்தே செயல்பட்டு வருகிறோம்' என்றார்.

Advertisement