குழந்தையை உயிருடன் புதைத்த தாய்: காதலன் கைது

புதுக்கோட்டை: திருமயம் அருகே உதயசூரியபுரம் பகுதியில் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் கல்லுாரி மாணவி வழக்கில், அந்த பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உதயசூரியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வினோதா, 21, இவர், இலுப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் நர்சிங் இறுதி ஆண்டு படிக்கிறார். இவருக்கும், அதே தனியார் கல்லுாரியில் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வரும் சிலம்பரசன், 22, என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.இதில் அந்த பெண் கர்ப்பமானார். நேற்று முன்தினம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தனக்கு தானே பிரசவம் பார்த்து, குழந்தையை பெற்றெடுத்த அந்த பெண், வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி, குழந்தையை புதைத்து விட்டார். புதைக்கப்பட்ட இடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்ட அவ்வழியே சென்ற பெண், உடனடியாக குழியை தோண்டி உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு, பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த பனையப்பட்டி போலீசார், புதைக்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு, புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.பனையப்பட்டி வி.ஏ.ஓ., செந்தில் புகாரில், பனையப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து, மாணவியின் காதலன் சிலம்பரசனை நேற்று கைது செய்தார். வினோதா அரசு மருத்துவமனையில், குழந்தையுடன் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.

Advertisement