மத்திய பிரதேச அமைச்சரின் மன்னிப்பை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்; சிறப்பு குழு அமைத்து உத்தரவு

3

புதுடில்லி: கர்னல் சோபியா குரேஷி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததுக்கு, மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. இவர் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


நம் ராணுவத்தினர் நடத்திய, 'ஆபரேஷன் சிந்துார்' தொடர்பான தகவல்களை நாட்டு மக்களுக்கு, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் அவ்வப்போது தெரிவித்தனர்.

ம.பி., யில் ஆளும் பா.ஜ.,வைச் சேர்ந்த அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா பற்றி சர்ச்சையாக பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த ம.பி., உயர் நீதிமன்றம், அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்து, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.



இதனால், அதிர்ச்சிஅடைந்த விஜய் ஷா, தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர் கர்னல் சோபியா குரேஷி குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கோரினார். இந்த வழக்கு, இன்று (மே 19) சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது, சோபியா குரேஷி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததுக்கு, அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:


* அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்பை ஏற்க முடியாது. முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம்.
* உங்கள் மன்னிப்பு எங்களுக்குத் தேவையில்லை. சட்டத்தின்படி எப்படி நடந்துகொள்வது என்பது எங்களுக்குத் தெரியும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

அமைச்சர் விஜய் ஷாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.

Advertisement