70 அடி பள்ளத்தில் விழுந்தவர் வீரர்களால் போராடி மீட்பு

மூணாறு: தொடுபுழா அருகே கோட்டப்பாறை வியூ பாய்ன்ட் பகுதியின், செங்குத்தான பாறையில் இருந்து, 70 அடி பள்ளத்தில் தவறி விழுந்தவர், உயிருடன் மீட்கப்பட்டார்.

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே வண்ணப்புரத்தைச் சேர்ந்தவர்கள் சாம்சன், 23, சிவாஜி, விஷ்ணு; இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் அதிகாலை, 3:30 மணிக்கு, கோட்டப்பாறை வியூ பாய்ன்ட் பகுதிக்கு சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி, செங்குத்தான பாறையில் இருந்து சாம்சன் உருண்டார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.

காளியாறு ஏ.எஸ்.ஐ., ஷம்ஸ் தலைமையில் போலீசார், தொடுபுழா தீயணைப்பு துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், செங்குத்தான பாறையிலிருந்து, 70 அடி பள்ளத்தில், சாம்சன் சிக்கி கிடப்பதை பார்த்தனர்.

மீட்புப் படையினர் மூன்றரை மணி நேரம் கடுமையாகப் போராடி, சாம்சனை வலையில் கட்டி மீட்டனர். அவர் உடலில் சிறிய காயங்கள் இருந்ததால், தொடுபுழா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

Advertisement