கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு ரூ.3,500 கோடி வழங்க வேண்டும்; கேட்கிறது அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

கோவை : தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில், கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் மகளிர் மாநாடு, கோவையில் நடந்தது.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம், நிருபர்களிடம் கூறியதாவது:

கூட்டுறவு வங்கிகள், பொதுமக்களுக்கு வழங்கியிருந்த விவசாய கடன்கள், நகைக்கடன், மகளிர் சுய உதவி கடன்கள் ஆகியவற்றை, மாநில அரசு தள்ளுபடி செய்த தொகையில், அசல் மற்றும் வட்டி தொகையாக, கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.3,500 கோடி வரை, மாநில அரசு திரும்ப அளிக்க வேண்டியுள்ளது.

இத்தொகையை, வரும் ஜூன் 30க்குள் திரும்ப செலுத்தாத பட்சத்தில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆணைபடி, கூட்டுறவு வங்கிகள் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும். எனவே, மாநில அரசு, இத்தொகையை உடனடியாக கூட்டுறவு வங்கிகளுக்கு திரும்ப வழங்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில், தற்போதுள்ள 2,000க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தலைவர் பத்மாவதி, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் அருணாச்சலம், தமிழ்நாடு கூட்டுவு வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் வைரப்பன், அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் ரவிக்குமார் உட்பட பலர் பேசினர்.

மாநிலம் முழுவதும், பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்றனர். முன்னதாக, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் வடிவேலு வரவேற்றார்.

Advertisement