பணம் கொடுத்தால்தான் கலைஞர் இல்ல திட்டத்தில் வீடு; தி.மு.க., தொண்டரின் கொந்தளிப்பு

17


குடிசை வீட்டில் வாழும் தி.மு.க., தொண்டனுக்கே வீடு இல்லை என ஆதங்கத்தில் வெளியிட்ட வீடியோ ரிஷிவந்தியம் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025 - 26ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்காக பயனாளிகள் தேர்வு தற்போது வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட, திருக்கோவிலுார் ஒன்றியம், பனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், 34; தி.மு.க., தொண்டர். இவர், தனக்கு வீடு கிடைக்காத ஆதங்கத்தை வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.


அதில், 'நான் தி.மு.க., வில் இருக்கிறேன். எனக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். தேர்தல் வந்தால் தி.மு.க., வேட்பாளருக்காக ஒண்ணாவது பட்டனில் போடு, இரண்டாவது பட்டனில் போடு என ஓட்டு போடுவதற்காக பிரசாரம் செய்து, ஓட்டு கேட்டு ஜெயிக்க வைத்தால், இப்போது என்னிடம் 30 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார்கள் எப்படி இது? என்ன நியாயம்' என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.


இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொத்தனார் வேலை செய்யும், குடிசை வாசியான இவரது வீடு மழை பெய்தால் ஒழுகும் என்பதால் கூரையின் மீது தார்பாயை போட்டு மூடி வைத்திருக்கிறார். தி.மு.க., தொண்டனுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு எந்த நிலை என எதிர்க்கட்சியினர் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி களமாடி வருகின்றனர்.

Advertisement