சிங்கம்புணரி கிரஷர் குவாரி லைசென்ஸ் ரத்து பாறை சரிந்த விபத்தால் நடவடிக்கை

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை மேகா புளூமெட்டல்ஸ் குவாரியில் பாறை சரிந்து 5 பேர் பலியானதை தொடர்ந்து குவாரி லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

மல்லாக்கோட்டையில் மேகவர்மன் பெயரில் மேகா புளூ மெட்டல்ஸ் கிரஷர் குவாரி செயல்படுகிறது. நேற்று முன்தினம் காலை 200 அடி ஆழ பள்ளத்தில் உள்ள பாறைகளை வெடிவைத்து உடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வெடி வைப்பதற்காக பாறையில் துளையிட்டனர்.

அப்போது பாறை சரிந்து விழுந்ததில், கீழே பணி செய்த ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த பொக்லைன் டிரைவர் ஹர்ஜித் 28, ஓடைப்பட்டி முருகானந்தம் 49, மதுரை இ.மலம்பட்டி ஆறுமுகம் 50, ஆண்டிச்சாமி 50, கணேசன் 43, பலியாகினர். இறந்த 4 பேர் உடல்களை தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் மீட்டனர். காயமுற்ற துாத்துக்குடி எட்டயபுரம் மைக்கேல் 43 சிகிச்சை பெற்று வருகிறார்.

பொக்லைன் இயந்திர டிரைவர் உடல் பாறைகளுக்குள் சிக்கி கொண்டது.

நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி ராதாபுரத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் புதைந்த டிரைவர் உடலை தேடிய பின் நேற்று காலை உடல் சிதறிய நிலையில் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிரஷர் குவாரி லைசென்ஸ் ரத்து



இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், காயமுற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார். இந்த சம்பவத்தை அடுத்து மாநில அளவில் உள்ள கிரஷர் குவாரிகள் விதிப்படி இயங்குகிறதா என ஆய்வு செய்ய மாவட்ட கனிம வளத்துறையினருக்கு அரசு உத்தரவிட்டது. மேகா புளூமெட்டல்ஸ் கிரஷர் குவாரியின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

Advertisement