மின் கட்டண உயர்வில் தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு தேவை கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

சிவகாசி":தமிழகத்தில் மின் கட்டண உயர்வில் இருந்து தொழில் நிறுவனங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கருக்கு, அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் மாநில இணைச் செயலாளர் (அச்சகம் , காலண்டர்) ஜெயசங்கர் அனுப்பியுள்ள மனு:

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியத்தின் வழிகாட்டுதல்படி 2022 முதல் 2024 வரை மின்கட்டணம் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்சாகமற்ற நிலையில் இயங்கி வருகின்றன. மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2024 --- 2025 நிதியாண்டில் மட்டும் தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வரும் ஆண்டில் பணவீக்க மதிப்பீட்டின்படி வீடுகளுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளித்ததை வரவேற்கிறோம். அதேபோல் தொழில் நிறுவனங்களுக்கும் மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement