நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை

1


ராஞ்சி: ஜார்க்கண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள லதேஹர் மாவட்டத்தில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் என்ற நக்சல் அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.



அதில் ஒருவன் ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா. மற்றொருவன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த பிரபாத் கஞ்சு என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.



அந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Advertisement