கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்

திருவனந்தபுரம்; ரெட் அலர்ட் எச்சரிக்கை ஒருபக்கம் இருக்க, கேரளாவில் பல்வேறு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.



அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து, கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.


அடுத்து வரக்கூடிய சில நாட்களில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


மழை விடாமல் பெய்து வரும் சூழலில் திருவனந்தபுரத்தில் 12 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. பாலக்காடு அருகே கஞ்சிராபுழாவில் படகு கவிழ்ந்ததில் 4 பேர் நீரில் மூழ்கினர். அவர்களில் 2 பேர் நீந்தி கரைசேர்ந்துவிட, மற்ற 2 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.


காசர்கோடில் உள்ள சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. திருச்சூர் அருகே உருலிகன்னு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.20க்கும் மேற்பட்ட வீடுகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.


தொட்டுப்பாலத்தில் பலத்த மழை மற்றும் காற்றின் தீவிரம் காரணமாக கிருஷ்ணன்குட்டி என்பவரின் வீடு நள்ளிரவு இடிந்து விழுந்தது.


இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணன்குட்டி, அரவது மனைவி ரத்னம் மற்றும் மகன் மனோஜ் ஆகியோர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.


கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கண்ணூர், காசர்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.


திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

Advertisement