தொழில் முனைவோராக்கும் திட்டம் அதிகாரி விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:துாய்மை பணியாளர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது தொடர்பாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரி, இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழில் முன்னோடி



துாய்மை பணியாளர்களை, தொழில் முனைவோர்களாக்க, 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி' திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது.

அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்க, மத்திய அரசு, 'நமஸ்தே' திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், யு டியூபர் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திற்கு உத்தரவிட்டது.

துாய்மை பணியாளர்



இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துாய்மை பணியாளர்களை, தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில், தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை மற்றும், 'ஜென் லாஜிஸ்டிக்ஸ்' ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி கூறிய நீதிபதிகள், மனுவுக்கு இரு அமைப்புகளும் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை இன்று தள்ளிவைத்தனர்.

இன்று நடக்கும் விசாரணையின்போது, துாய்மை பணியாளர்களை, தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தியது தொடர்பாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள், வாழ்வில் முன்னேற்றம் காண உதவும் நல்ல திட்டம். இதை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Advertisement