அதிகாரிகளை அதிர வைத்த மனுக்கள் நில அளவைத் துறை மீது சரமாரி புகார்

அன்னுார்: அன்னூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், மூன்று நாட்களில் 431 மனுக்கள் பெறப்பட்டன. நில அளவைத் துறை மீது, சரமாரியாக புகார் தெரிவிக்கப்பட்டது.

அன்னுார் தாலுகா அலுவலகத்தில், கடந்த 20ம் தேதி ஜமாபந்தி துவங்கியது. முதல் நாள் தெற்கு உள்வட்டத்தைச் சேர்ந்த 109 பேர், நேற்று முன்தினம் வடக்கு உள் வட்டத்தை சேர்ந்த 193 பேர், நேற்று எஸ்.எஸ். குளம் உள் வட்டத்தைச் சேர்ந்த 109 பேர் என 431 பேர் மனு அளித்தனர்.

கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் மனுக்களை பெற்றார்.

எல்லப்பாளையம் காலனி மக்கள் மனு அளித்து கூறுகையில், 'நாங்கள் வசித்து வரும் வீடுகள் எங்கள் மூதாதையர்களது.

பட்டாவில் மூதாதையர் பெயர் மட்டுமே உள்ளதால் எங்களுக்கு வீடு பழுது பார்க்கவோ புதிய வீடு ஒதுக்கவோ அதிகாரிகள் மறுக்கின்றனர்.

இதற்காக, 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம்' என கண்ணீருடன் தெரிவித்தனர்.

ஆர்.டி.ஓ., உடனடியாக பட்டா வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

பிறப்பு - இறப்பு தவிப்பு



கஞ்சப்பள்ளி மக்கள் அளித்த மனுவில், 'நத்தம் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். தாசபாளையத்தில் வாடகை கட்டடத்தில் செயல்படும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும்' என்றனர். ஆம்போதி மக்கள் அளித்த மனுவில்,' தாலுகா அலுவலகத்தில் 2008ம் ஆண்டுக்கான பிறப்பு இறப்பு பதிவேடு இல்லை. இதனால், பிறப்பு -- இறப்பு பதிவு செய்ய முடியாமல் தவிக்கிறோம்,' என்றனர்.ஊத்துப்பாளையம் விவசாயி அளித்த மனுவில், 'சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என ஆர்.டி.ஓ.,விடம் தெரிவித்தார். மனு அளித்தவர்களில் பலர் 'நிலம் அளக்க விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் அளக்கவில்லை. உட்பிரிவு செய்வதில் தாமதம் செய்கின்றனர்,' என புகார் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தாசில்தார்கள், வேளாண் துறை, தோட்டக்கலை துறை, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மனு அளித்தனர்.

106 வயது

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் அளித்த மனுவில், 'பெள்ளேபாளையம் ஊராட்சியில் ஒருவர் 106 வயது வாழ்ந்து இறந்ததாக இறப்புச் சான்று கொடுத்துள்ளனர். இதன் உண்மைத்தன்மையை அறிய வேண்டும். 60 ஆயிரம் வாழைகள் அன்னூர் தாலுகாவில் முறிந்து விழுந்துள்ளன. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement