மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள்...பாய்ச்சல்:மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாததால் வாக்குவாதம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுப்பதில்லை என, பொறியியல், சுகாதாரம், வருவாய் பிரிவு அதிகாரிகள் மீது, கவுன்சிலர்கள் நேற்று வெகுவாக சாடினர். குப்பை பிரச்னை தீராமல் தொடர்வதால், மேயருக்கு நிர்வாக திறனில்லை என, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வார்டு பிரச்னைகளை தீர்க்கக்கோரி தர்ணா போராட்டமும் நடந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், அண்ணா அரங்கம் முதல் மாடியில், மேயர் மகாலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.
துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி பொறியாளர் கணேசன், கவுன்சிலர்கள், அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.
காரசார விவாதம்
மொத்தமுள்ள 95 தீர்மானங்களில், 85 மற்றும்91 ஆகிய இரு தீர்மானங்களும் ஒன்றாக தவறுதலாகபதிவாகி இருந்ததால், ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வதாக மேயர் மகாலட்சுமி தெரிவித்தார்; மீதமுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் துவங்கிய உடன், மாநகராட்சி கூட்டத்தின் தீர்மானம் வாசித்தனர். அதை இடைமறித்து, கவுன்சிலர்கள் பலரும் தங்கள் வார்டு மற்றும் பொது பிரச்னை குறித்து காரசாரமாக பேசினர்.
கூட்டம் துவங்கிய உடன், பணிகள் நிலைக்குழு தலைவர் கார்த்தி பேசுகையில், ''குப்பை அகற்றுவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, வணிக நிறுவனங்களில் மாநகராட்சி ஊழியர்கள் அல்லாதோரால் அகற்றப்படும் குப்பை, மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது,'' என குற்றஞ்சாட்டினார்.
மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், இது குறித்து விசாரிப்பதாக கூறி மழுப்பினர்.
அப்போது, 23வது வார்டில் பாதாள சாக்கடை பிரச்னை தொடர்ந்து எழுகிறது.
தங்களது வார்டில் உள்ள பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டால் தான் எழுந்து செல்வேன் என, அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதா, மாநகராட்சி கூட்டத்திலேயே மேயர் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேயர் மகாலட்சுமி, கவுன்சிலர் புனிதாவை சமாதானம் செய்தார். 23வது வார்டில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அப்பகுதியில் பணிகள் செய்ய இருப்பதாக பொறியாளர் கணேசன் தெரிவித்தார்.
பணிகள் செய்ய ஏற்பாடு செய்வதாக மேயர் மகாலட்சுமி தெரிவித்த பிறகே, கவுன்சிலர் புனிதா எழுந்து சென்றார்.
குப்பை பிரச்னை
தொடர்ந்து நடந்த விவாதம்:
சண்முகானந்தம், அ.தி.மு.க., கவுன்சிலர்: குப்பை அகற்றுவதில் இவ்வளவு பிரச்னை எழும்போது, மாதந்தோறும் 90 லட்சம் ரூபாய் 'பில்' தொகை ஏன் தர வேண்டும்?
மகாலட்சுமி, மேயர்: ஒவ்வொரு முறை வழங்கும் பில் தொகைக்கு, என்னிடம் அனுமதி வாங்குவதில்லை.
சண்முகானந்தம்: இதை தான் நிர்வாகத் திறன் குறைவு என்கிறோம். குப்பை விவகாரத்தை கண்காணிக்க வேண்டும்.
இதற்கு, தி.மு.க., கவுன்சிலர்கள் பலர், 'மேயரை பார்த்து நிர்வாகத் திறன் குறைவு என எப்படி சொல்லலாம்? மாநகராட்சி கூட்டத்தில் முறையாக பேச வேண்டும்' என, சண்முகானந்தத்திடம் வாக்குவாதம் செய்தனர்.
ஜோதிலட்சுமி, அ.தி.மு.க., கவுன்சிலர்: எங்கள் வார்டில் மோட்டார் ஒன்றை பொருத்தியதாக தீர்மானத்தில் கூறியுள்ளீர்கள். மோட்டார் பொருத்தினாரா, இல்லையா என நான் எப்படி தெரிந்துகொள்ள முடியும்? கவுன்சிலர்களுக்கு, அதிகாரிகள் தகவல்கூட தெரிவிப்பதில்லை.
கணேசன், பொறியாளர்: உதவி பொறியாளர் வாயிலாக பணி செய்கிறோம். கவுன்சிலர்களுக்கு இனி தகவல் தெரிவிக்கிறோம்.
கார்த்தி, பணிகள் குழு தலைவர்: வணிக ரீதியிலான கட்டடங்களுக்கு வரி விதிப்பு சரியில்லை. குறிப்பாக, மாநகராட்சி கட்டடம் அருகில் உள்ள பெரிய மருத்துவமனை வீடாகவே கருதி, வரி விதிக்கப்பட்டு வருகிறது.
வருவாய் பிரிவு அதிகாரி:அம்மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்து, உரிய வரி விதிப்பு செய்யப்படும்.
சுரேஷ், தி.மு.க., கவுன்சிலர்: மாநகராட்சி சட்டப் பிரிவு 15ல், பல பணிகளை அவசரமாக செய்கின்றனர். 29வது வார்டில் உள்ள முக்கிய பணிகளை என்றைக்கோ செய்திருக்கலாம்; கமிஷனர் செய்ய மறுக்கிறார். அவர் பாகுபாடு பார்க்கிறார்.
தேவராஜ், தி.மு.க., கவுன்சிலர்: 12வது வார்டில் உள்ள சுடுகாட்டின் சுவரை உயர்த்தவும், மக்கள் நிற்பதற்கு நிழற்கூரை அமைக்கவும் கேட்டிருந்தேன். அதுபற்றி பரிசீலனை செய்யவே இல்லை.
கணேசன், பொறியாளர்: சுற்றுச்சுவரை உயர்த்த ஏற்பாடு செய்யப்படும். நிழற்குடை அமைப்பது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம்.
கவுன்சிலர்கள்: மாநகராட்சி முழுதும் நாய்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. பொதுமக்களை தெரு நாய்கள் துரத்தி கடிக்கின்றன.
மகாலட்சுமி, மேயர்: நாய்கள் பற்றி கணக்கெடுப்பு பணிகள் நடக்கின்றன. கருத்தடை மையமும் அமைக்கப்படுகிறது. நாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும்.
கயல்விழி, தி.மு.க., கவுன்சிலர்: ஓரிக்கை பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் அடிக்கடி மோட்டார்கள் புதிதாக பொருத்துகின்றனர். ஆனால், பழைய மோட்டார்களை என்ன செய்கின்றனர் என தெரிவிப்பதில்லை.
அது பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. பழைய மோட்டார்கள் எத்தனை உள்ளது என பட்டியல் வேண்டும்.
கணேசன், பொறியாளர்: பழைய மோட்டார்கள் அப்படியே உள்ளன. அவை பற்றிய பட்டியலை தருகிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நேற்று நடந்த கூட்டத்தில், சுகாதாரப்பிரிவு, பொறியாளர் பிரிவு, வருவாய் பிரிவு என அனைத்து பிரிவு அதிகாரிகள் மீது, கவுன்சிலர்கள் பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பினர். அதிகாரிகள் போன் எடுக்கவில்லை எனவும், வார்டு பிரச்னைக்கு செவி சாய்க்கவில்லை எனவும், கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை இல்லை எனவும், பலரும் கோபத்துடன் பேசினர். இதனால், மாநகராட்சி கூட்டத்தின் பெரும்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.