கொரோனாவால் பாதிப்பில்லை; அறிகுறி இருந்தால் பரிசோதிப்பது அவசியம்

1


சென்னை: தமிழகத்தில் உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு இல்லை என்றாலும், அறிகுறி இருப்பவர்களை பரிசோதிப்பது அவசியம் என்கின்றனர் டாக்டர்கள்.

சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து, இந்தியாவில் தென் மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.


தமிழகத்தை பொறுத்தவரை, அரசு சார்பில் பரவலாக செய்யப்படும் கொரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் மட்டும் அறிகுறிகள் அடிப்படையில் பரிசோதனை செய்வதால், சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அதேபோல, அரசும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, அரசு டாக்டர்கள் கூறியதாவது:



கடந்த ஏப்ரலில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் சளி மாதிரிகள், மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மரபணு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டன.



அவற்றின் வாயிலாக, 'ஒமைக்ரான்' வகையில், பி.ஏ., 2 மற்றும் ஜெ.என்., 1 உள்ளிட்ட வீரியமில்லாத வகை பாதிப்புகளே இருப்பது கண்டறியப்பட்டது.


இந்த மாதத்தில் புதிய வகை பரவி இருந்தால், பாதிப்பின் வீரியமும் அதிகரித்திருக்கும். அத்தகைய நிலை இதுவரை இல்லை. இதனால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.


ஆனால், தனியார் மருத்துவமனைகளை போல, அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திட்டத்தை, அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement