வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் அரசு; பதவியை ராஜினாமா செய்ய யூனுஸ் முடிவு

27

டாக்கா: ராணுவ தளபதியுடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இந்த அரசுக்கு ஆரம்பத்தில் வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜாமன் ஆதரவு தெரிவித்து வந்தார்.


சமீபத்தில் ராணுவ தளபதியிடம் ஆலோசிக்காமல், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை யூனுஸ் நியமித்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக பொதுத்தேர்தலை அறிவிக்க யூனுசுக்கு ராணுவ தளபதி ஜாமன் அழுத்தம் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக பிற தளபதிகளுடன் ஆலோசிக்க அவசரக் கூட்டத்தை கூட்டினார். பெரும்பாலான ராணுவ தளபதிகள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்தனர். இது பிரதமர் யூனுஸூக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், மேயர் பதவி தொடர்பாக யூனுஸ் அரசுக்கு எதிராக வங்கதேச தேசியவாத கட்சி டாக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மாணவர்கள் அமைப்பினரும் இன்று போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.


இந்த நிலையில், அடுத்தடுத்த நெருக்கடிகள் காரணமாக வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து மாணவர்கள் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் நித் இஸ்லாம் கூறுகையில், "யூனுஸ் சாரின் ராஜினாமா முடிவு பற்றிய செய்திகளை கேட்டேன். உடனே அவரை சந்தித்து இது பற்றி ஆலோசனை நடத்தினேன். அவரும் ராஜினாமா செய்வது பற்றி யோசித்து வருவதாகக் கூறினார்.


இதுபோன்ற சூழலில் பணியாற்றுவது கடினம் என்று நினைக்கிறார். ஒவ்வொருவரும் அவருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன்," எனக் கூறினார்.

Advertisement