'கிரீன் காரிடார் - 3' திட்டத்தில் 400 கிலோ வோல்ட் வழித்தடங்கள்

2



சென்னை: தமிழகத்தில், 'கிரீன் காரிடார் - 3' எனப்படும், பசுமை மின் வழித்தட மூன்றாம் கட்ட திட்டத்தில்பசுமை மின்சாரத்தை எடுத்து செல்ல, 400 கிலோ வோல்ட் திறனில், மின் வழித்தடங்கள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.


தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்நிலையம்அமைக்க, சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே, தனியார் நிறுவனங்கள் அமைக்கும் பசுமை மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பணியில், மின் வாரியம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஜெர்மனியின் கே.எப்.டபிள்யூ., வங்கி உதவியுடன், கிரீன் காரிடார் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது.

* ↓கிரீன் காரிடார் - 1 திட்டத்தில், 1100 கோடி ரூபாய் செலவில், திண்டுக்கல் மாவட்டம், தென்னம்பட்டியில், 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையமும், அங்கிருந்து துாத்துக்குடி மாவட்டம்கயத்தாறு வரை, 400 கி.வோ., வரை இரட்டை சுற்று மின் வழித்தடமும் அமைக்கப்பட்டு உள்ளன


கிரீன் காரிடார் - 2 திட்டத்தின் கீழ், 1006 கோடி ரூபாயில், திருநெல்வேலி சமூகரெங்கபுரத்தில், 400 கி.வோ., துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும், திருப்பூரில் உள்ள பூளவாடி, கொங்கல்நகர், கன்னியாகுமரி முப்பந்தலில் தலா, 230 கி.வோ., திறனில் மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.



தற்போது, கிரீன் காரிடார் - 3 திட்டத்தை செயல்படுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், மின் வழித்தடங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.


இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தென் மாவட்டங்களில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அதிகம் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே கிரீன் காரிடார் - 3 திட்டத்தில் துாத்துக்குடியில், 400 கிலோ வோல்ட் திறனில் ஒரு துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.



ஏற்கனவே உள்ள துணை மின் நிலையங்களுக்கு அதிக மின்சாரம் எடுத்து செல்லும் வகையில், 400 கி.வோ., மின் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement