சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி இன்று துவக்கம்

குன்னுார் : குன்னுார் சிம்ஸ்பூங்காவில், 65வது பழ கண்காட்சி இன்று துவங்குகிறது.

நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசன் களைகட்டியுள்ளது. குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர, 35 வகைகளில், 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டதில், 'சால்வியா, மெரிகோல்டு, பிளாக்ஸ், ஆஸ்டர், லிசியான்தஸ், பால்சம்,' உள்ளிட்ட மலர் வகைகள் பூத்து குலுங்குகிறது. இன்று துவங்கும், 65வது பழ கண்காட்சியை, 26ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடத்த தோட்டக்கலை துறை திட்டமிட்டுள்ளது.

விழாவில், சுற்றுலா பயணத்துக்கு பயன்படும் கார் முதல், கோடையில் அதிகளவில் உட்கொள்ளும் ஜூஸ் வரையிலான பல பொருட்கள், நான்கு டன் அளவிலான பழங்களால் வடிவமைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பழைய நுழைவாயிலில் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை துறையின் பங்களிப்பாக, பல அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் பல அரிய வகை பழங்கள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

பெரியவர்களுக்கு, 100 ரூபாய் சிறியவர்களுக்கு 50 ரூபாய், கேமராவிற்கு, 100 ரூபாய், வீடியோ கேமராவிற்கு, 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

'கியூ ஆர்' கோடு தகவல்...

சிம்ஸ் பூங்காவில் உள்ள, 30 வகையான மலர் செடிகளின் விபரங்கள் அறிந்து கொள்ள,'கியூ ஆர்' கோடு போர்டு, அந்தந்த செடிகளின் முன் வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் தங்களது மொபைல் போனில் ஸ்கேன் செய்யும் போது, நேரடியாக விக்கிபீடியா தளத்திற்கு சென்று அந்த மலரின் முழு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement