வாகன சோதனையில் சிக்கிய குற்றவாளி

வில்லியனுார்: வில்லியனுார் அருகே போலீசார் வாகன சோதனையில் கொலை குற்றவாளி சிக்கினார்.

புதுச்சேரி, வில்லியனுார் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தால் நேற்று முன்தினம் நள்ளிரவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் பைபாசில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக பல்சர் பைக்கில் (பி.ஓய் 05- எச் 6408) ரத்த கரையுடன் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர், புதுச்சேரி, லாஸ்பேட்டை, எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் மணி, 23, என்பதும், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அவரது மாமாவை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து மேற்கு பகுதி எஸ்.பி., வம்சிதரெட்டிக்கு, இன்ஸ்பெக்டர் தகவல் தெரிவித்தார். எஸ்.பி., உத்தரவின்பேரில் சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து சிதம்பரம் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கொலையாளி மணியை கைது செய்து அழைத்து சென்றார்.

Advertisement