லால்பாக் தாவரவியல் பூங்காவில் 150 ஆண்டு கால மரம் சாய்ந்தது

பெங்களூரு:லால்பாக் தாவரவியல் பூங்காவில் உள்ள 150 ஆண்டுகால மரம் சாய்ந்தது.

பெங்களூரு, லால்பாக் தாவரவியல் பூங்காவில் பல ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை பார்க்கவே பலரும் வருகை தருவர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெங்களூரில் பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன.

அவ்வகையில், நேற்று லால்பாக்கில் உள்ள 150 ஆண்டு கால பழமையான மரம் ஒன்று சாய்ந்தது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இதுகுறித்து, தோட்டக்கலை துறையின் இயக்குநர் ஜெகதீஷ் கூறுகையில், “தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, 150 ஆண்டுகால பிகஸ் கன்னிங்காமி இனத்தை சேர்ந்த மரம் சாய்ந்தது. இந்த மரம் சனிக்கிழமை அகற்றப்படும்” என்றார்.

அதேபோல பெங்களூரு, என்.ஆர்., காலனியில் உள்ள ஏ.ஆர்.எஸ்., பப்ளிக் பள்ளி அருகில் உள்ள சாலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் மரத்தின் கிளை ஒன்று சாலையில் சாய்ந்தது. இதனால், அந்த சாலையில் பைக்குகள் மட்டுமே சிரமப்பட்டு செல்ல முடிந்தது.

Advertisement