51,000 கவுரவ ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் நியமனம்

பெங்களூரு: ''அரசு பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண, 51,000 கவுரவ ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என தொடக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தொடக்க பள்ளிகளுக்கு 40,000 ஆசிரியர்கள், உயர்நிலை பள்ளிகளுக்கு 11,000 ஆசிரியர்களை நியமித்து கொள்ள, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 29ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்விக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தால், காலியாக உள்ள கவுரவ ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளி திறப்பதற்கு முன்பே, ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

தொடக்க பள்ளி கவுரவ ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய், உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 12,500 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement