'பூமியின் நிலைத்தன்மைக்கு இயற்கையுடன் இணையணும்!'

சிறு எறும்பு துவங்கி, ஒவ்வொரு புழு, பூச்சி, பறவை உட்பட யானை வரையிலான பெரிய விலங்கினங்கள் வரை, அனைத்தும் மனிதன் வாழ்வதற்குரிய சூழல் கட்டமைப்பை உருவாக்கி தருகின்றன.

இதை வலியுறுத்தும் விதமாக தான் ஆண்டுதோறும், மே, 21ல், பல்லுயிர் பெருக்கத் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டின் மையக் கருத்தாக, 'இயற்கையுடன் இணக்கமும், நிலையான வளர்ச்சியும்' என்ற மையக் கருத்தை ஐ.நா., சபை முன்வைத்திருக்கிறது.

மாசு குறைந்து, பசுமை செழிக்கும் மலை மாவட்டங்கள், சுற்றுலா நகரங்கள் மட்டுமின்றி, மாசு நிறைந்த திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் கூட, பல்லுயிர் பெருக்கம் குறித்த விழிப்புணர்வை பெறுவது அவசியம் என்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

இதனை மையமாக வைத்தே, திருப்பூர் வனத்துறை, திருப்பூர் ரோட்டரி மற்றும் திருப்பூர் இயற்கை கழகம் இணைந்து, நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில், பல்லுயிர் விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் பறவை நோக்கல் நிகழ்ச்சியை நடத்தின.

''குளம், குட்டைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையால் நீர்த்தாவரங்கள், நீர்வாழ் பறவையினங்களின் வாழ்வியல் சூழல் பாதிக்கும். உயிரினங்களின் வாழ்வியல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும்'' என, அறிவுறுத்தினார் திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன்.

நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் நாரை, கூழைக்கிடா, பாம்புதாரா உள்ளிட்ட உள்ளூர் பறவையினங்கள் அதிகளவில் கூடு கட்டியிருப்பதை கண்ட இயற்கை ஆர்வலர்கள், மகிழ்ச்சியடைந்தனர்.

அவற்றை மாணவ, மாணவியருக்கு காண்பித்த அவர்கள், பறவைகளின் வாழ்வியல் சூழல், அவற்றால் ஏற்படும் விதைப்பரவல், அதனால் விரிவடையும் பசுமைப்பரப்பு உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கத்தின் பயன்களை விளக்கினர்.

Advertisement