படகு இல்லத்தில் கழிவுகளை துார்வாரும் பணி துவக்கம்

வால்பாறை : வால்பாறையில், கழிவு நீர் தேங்கிய படகு இல்லத்தில் துார் வாரும் பணி துவங்கியது.

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, நகராட்சி சார்பில் படகுசவாரி துவங்கப்பட்டுள்ளது. படகு சவாரியில் பயணம் செய்ய, 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், படகுஇல்லத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில், வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை போன்றவை சங்கமிக்கின்றன. இதனால், கழிவு நீரில் சுற்றுலா பயணியர் படகுசவாரி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

படகுஇல்லத்தில் தேங்கி நிற்கும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு, உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தியும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் ரகுராமன் ஆகியோர் உத்தரவின் பேரில், படகு இல்லத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி, துார் வாரும் பணி துவங்கியுள்ளது.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை படகு இல்லத்தில், பல நாட்களாக தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை அகற்றும் வகையில், துார் வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது.

படகு இல்லத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றிய பின், புதியதாக தண்ணீர் சேமித்து படகு சவாரி செல்ல சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுவர். அது வரை படகுசவாரி நிறுத்தப்படும்,' என்றனர்.

Advertisement